தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நேர்மையான அரசியல் செய்யாததால் அறவழியில் அரசியல் செய்வதற்காகவே தான் ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியலில் இறங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்த மூன்றாவது நாளான இன்று (ஜனவரி 2) சென்னையில் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை ரஜினி சந்தித்தார்.
ரஜினி முன்மொழிந்த ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ''தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் உண்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுகின்றனர். அதனால் தர்மம், உண்மை, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆன்மிக அரசியலை நடத்த கட்சி தொடங்கியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
ஆன்மிக அரசியல் என்பது தர்மத்தோடு நடந்துகொள்வது என்றும் தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் பேசிய ரஜினி திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாக பெங்களூரூவில் சம்யுக்த கர்நாடகா என்ற பத்திரிக்கை நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்ததாக தெரிவித்தார்.
இந்திய அரசியலில் சுதந்திர போராட்டம் தொடங்கி அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தமிழகத்தில் இருந்தே தொடங்கியுள்ளதால், தான் நினைக்கும் அரசியல் புரட்சியும் தமிழகத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்பது தனது ஆசை, அதிலும் அந்த மாற்றம் தற்போதைய காலத்தில் தொடங்குவது மேலும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.