கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ஆற்றுநீரில் ரசாயன நுரை பொங்கி எழுந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகளுள் ஒன்று ஓசூர் கெலவரப்பள்ளி அணை. இந்த அணை கர்நாடகத்தில் பெய்யும் மழை நீரையே நம்பியுள்ளது. பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் ரசாயனங்கள் கலந்து வருவதால் இந்த நீரில் நச்சுத்தன்மை கலந்து காணப்படுகிறது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நீரில் நுரை பொங்கி வழிந்தோடுகிறது. இதனால் இந்தப் பகுதி விவசாய மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருப்பூர் நொய்யலாற்றிலும் இதுபோல் ரசாயன நுரை பொங்கியது. திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள், சட்டவிரோதமாக, திட்டமிட்டே நொய்யலாற்றில் கழிவுநீரைக் கலந்துவிட்டதால்தான், இப்படி நுரை பொங்கி ஓடியதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோல் ஆறுகளில் பொங்கும் ரசாயன நுரைக்கு சமீபத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொடுத்த விளக்கம் பல தரப்புகளிலும் சர்ச்சைகளை எழுப்பியது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.