தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்தார். அவரது மக்கள் நலத்தொண்டுகளை பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அ.தி.மு.க. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை நேற்று அக்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்-சபையிலும் எழுப்பினர்.மேல்-சபையின் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழைகளின் முன்னேற்றத்துக்காக தனது கடைசி மூச்சுவரை பாடுபட்டவர் ஜெயலலிதா. கோடிக்கணக்கான மக்களால் அவர் ’அம்மா’ என அன்போடு அழைக்கப்பட்டார். இன்று நாம் அம்மாவை இழந்து விட்டோம். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது மதி நுட்பம் மற்றும் ஆட்சித்திறனை உலகின் எந்த தலைவருடனும் ஒப்பிட முடியாது.
எனவே அவரது 32 ஆண்டு தலைசிறந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம். மேலும் அவரது முழு உருவ வெண்கலச்சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவுவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவருக்கு நோபல் பரிசு வழங்கவும் மத்திய அரசு சிபாரிசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.’
இவ்வாறு விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.